எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Monday, January 2, 2012




வருகை தந்திருக்கும் தங்களுக்கு எனது பசுமை வணக்கங்கள் !

உங்களுடன் சில வார்த்தைகள் 


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 


ஆனால்... 


மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் ஆபத்துகள்...


2020 ஆம் ஆண்டில் முழுமையாக உருகிவிடும் என்று கணிக்கப்பட்ட ஆர்ட்டிக் பனிப்படிவுகள் 2015 ஆம் ஆண்டே உருகிவிடும் என்று வேறு தற்போது விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்...!!

உலகில் கார்பன் வாயுவின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது...இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...ஆனால் பெரிய நாடுகள் எல்லாம் தங்களை எவ்வாறு பொருளாதாரத்தில் வளர்த்துக்கொள்வது, வளர்ந்த நாடாக பேர் எடுப்பது எப்படி என்ற கவனத்தில்தான்  இருக்கின்றன...!

மக்களை பற்றி நாடு அக்கறை கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும்  ஆனால் மக்களாகிய நமது அக்கறை என்ன ? நம் வீட்டில் ஒரு ஓட்டை என்றால் அப்படியே விட்டு விடுவோமா? அது போலத்தான் நாம் வாழும் பூமி. பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?!   அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டு செயல்  படுத்தபட வேண்டும்...!

இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது...எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்...?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான் பசுமை விடியல்...!

கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் ...! இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களை கோர்த்து இருக்கிறோம்...!

இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல...நமது கனவு !!


தளம் பற்றி...

சுற்றுசூழலை பாதுகாப்பது, மேம்படுத்துவது எவ்வாறு, எந்த விதத்தில் என்பதை பற்றி எல்லாம் இத்தளத்தில் தகவல்கள் சேகரிக்கப்பட இருக்கின்றன . சுற்றுசூழல் வளம் பற்றிய கட்டுரைகள் , தகவல்கள், கவிதைகள், செய்திகள் போன்றவை பகிரபட இருக்கின்றன...

பூமியை வளப்படுத்த, சுற்றுசூழலை மேம்படுத்த இதுவரை என்னவெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன என்பதை விட இனி என்னவெல்லாம்  செய்யவேண்டும் என்பதை பற்றிய ஒரு வழிகாட்டுதலே இந்த தளம். அதே சமயத்தில், தேவையென்றால் உடனே களப்பணி ஆற்றவும் தயாராக இருக்கிறோம்...!

சுற்றுச்சூழல் 

தற்போது மற்ற எதைவிடவும் நாம் வாழும் பூமியின் நிலை மிகவும் கவலை தரக்கூடிய நிலையில் இருக்கிறது...பல இன்னல்கள், பல தொல்லைகள் ! அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒரு பக்கம் மலை அளவு விஸ்தரித்து கொண்டே செல்கிறது என்றால் அதன் விளைவாக ஏற்படும் கேடுகள் மற்றொரு பக்கம் உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது...!

* குடிநீருக்காக நாடுகளிடையே ஒரு யுத்தம் வரலாம்

* வெப்பம் அதிகரிப்பால் பனிமலைகள் உருகலாம்.

* கடல் மட்டம் அதிகரிக்கலாம்.

* மாசுபடிந்த காற்றினால் புது புது நோய்கள்.

* பருவம் தவறி பெய்யும் மழையினால் விவசாயம் கேள்விக்குறியாகலாம்.

இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...ஓடி ஓடி சம்பாதித்தும் அதை அனுபவிக்க நல்ல தூய்மையான சூழல் இல்லாமல் போனால் கஷ்டப்பட்டு உழைத்து பலன் என்ன ?!! ஆகவே உடனே தேவை சுற்றுச்சூழல் மீதான கவனம் !!

வாழும் பூமியை முதலில் நாம் வாழ தகுந்த இடமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளுவோம் ! நமக்கு பின் வரும் தலைமுறைகளையும் நிம்மதியாக வாழ வழிவகை செய்குவோம்...!

சொல் மட்டும் அல்ல செயலும்!

'சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும்' என்று வெறும் எழுத்திலும் பேச்சிலும் மட்டும் வெளிப்படுத்தி கொண்டிருந்தால் போதாது என்ற எனது கருத்தை அழுத்தமாக இங்கே பதிய வைக்கிறேன்.

பலருக்கும் மோசமான சுற்றுசூழல் குறித்தான கவலை, ஆதங்கம் இருக்கும். அதனால் தான் இணையத்தில் இதை குறித்த பல பதிவுகள் எழுதப்பட்டு வருகின்றன...!!

சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது களத்தில் இறங்கி செய்வதாக இருக்க வேண்டும், விழிப்புணர்வு கொடுக்ககூடிய கருத்துக்கள் படிப்பறிவில்லாத பாமர மக்களை தான் சென்றடைய வேண்டும், படித்த மக்களுக்கு சொன்னாலும் அது ஒரு குறுகிய வட்டத்தில் முடிந்து விடுவதை உணர முடிகிறது. ஆனால் படிப்பறிவில்லாத மக்கள் அப்படி அல்ல, புதிதாக ஒன்றை கேள்விபட்டதும் உடனே அதை பிறரிடம் கூறி விவாதிக்கிறார்கள், எதிர்த்து கேட்கிறார்கள், சரியென பட்டால் எடுத்துக்கொள்கிறார்கள்...இவர்கள் இடத்தில் தான் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் !

அவர்களிடம் இருந்து தான் நமது ஆக்கபூர்வ நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். அவ்வாறே தொடங்குவோம் என உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

பசுமை விடியல் இயக்கத்தின் சார்பாக சீமைகருவேல மரம் வேரறுப்பது தொடர்பாக முழு வீச்சில் இறங்குவதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளவும் இன்னும் பல ஆக்கபூர்வமான திட்டங்கள் மேற்கொள்ளப்படவும் இருக்கின்றன.



ஒரு மெகாத் திட்டம்

மரம் நடுவது தொடர்பாக அந்தந்த ஊரில் உள்ள பதிவர்களின் உதவியுடன் ஒரே சமயத்தில் தமிழகம் முழுவதும் மரம் நடவேண்டும் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. இதற்காக பதிவுலக நட்புகள் பலரின் ஆதரவை திரட்ட  இருக்கின்றேன்...பெரிதாக வேலை, செலவு ஒன்றும் இருக்காது...எல்லாம் நாங்கள் தயார் செய்து கொடுத்துவிடுவோம்...விரைவில் இதற்கான வேளை வரட்டும் என காத்திருக்கிறேன். 


அதற்கு நீங்கள் அனைவரும் தங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தர வேண்டும் என விரும்புகிறேன்...வேண்டுகிறேன் ! பல கைகள் சேர்ந்தால் நிச்சயம் 'விடியும் நம் வானம்...பசுமையாய்' ! 


நம் மண்ணின் மீது அக்கறையும் ஆர்வமும் பாசமும் கொண்ட நண்பர்கள் விரும்பினால் எங்களுடன் இணைந்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் எதுவும் தேவை பட்டால் தளத்தில் இருக்கும் எங்கள் இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்...


வெப்சைட்-  www.pasumaividiyal.org

பசுமைவிடியலில் தற்போது என்னுடன் கைகோர்த்திருக்கும் பசுமைப் போராளிகள் -


ISR. செல்வகுமார்
பிரபு கிருஷ்ணா
சூர்யபிரகாஷ் 


எங்கும் பசுமை வளம் காண்போம்...நம் குழந்தைகளை, குழந்தைகளின் குழந்தைகளை  செழுமையின் மடியில் துயிலச்செய்வோம் !!

அனைவருக்கும் பசுமை வாழ்த்துக்கள் !!


- பசுமை விடியல் நிர்வாகி......



8 comments:

பால கணேஷ் said...

மிகமிக நல்ல முயற்சி கௌசலயா மேடம். அனைத்து மனித ஜீவன்களுக்காகவும் செய்யப்படும் இந்த நற்காரியத்திற்கு வாழ்த்துக்கள். என்னாலியன்ற பங்களிப்பைச் செய்ய எப்போதும் தயாராகவே உள்ளேன். நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
பயனுள்ள முயற்சி.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கௌசல்யா,
பசுமையான தங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.
நிர்வாகிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இன்றைய உலகின் முக்கியத் தேவை இந்த பசுமை மாற்றம்.

வரும் கால சந்ததிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்ந்திட நம்மால்
இயன்றதைச் செய்வோம்.

Kousalya Raj said...

@ கணேஷ் said...

பசுமைவிடியலுக்கு வருகை தந்தமைக்கு மகிழ்கிறேன் கணேஷ்.

//என்னாலியன்ற பங்களிப்பைச் செய்ய எப்போதும் தயாராகவே உள்ளேன். //

உங்களின் இந்த வார்த்தைகள் எங்களுக்கு உத்வேகத்தை கொடுகிறது. உங்களின் உதவி தேவைப்படும்போது உங்களை நிச்சயம் நாடுவோம். நன்றிகள் கணேஷ்

Kousalya Raj said...

@@ Rathnavel said...

//நல்ல பதிவு.
பயனுள்ள முயற்சி.
மனப்பூர்வ வாழ்த்துகள்.//

உங்களின் வருகைக்கு மகிழ்கிறேன் ஐயா.

வாழ்த்துக்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

நன்றிகள் ஐயா.

Kousalya Raj said...

@@ மகேந்திரன் said...

வருகைக்கு மகிழ்கிறேன் மகேந்திரன்.

//இன்றைய உலகின் முக்கியத் தேவை இந்த பசுமை மாற்றம்.//

உண்மைதான்.

//வரும் கால சந்ததிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்ந்திட நம்மால்
இயன்றதைச் செய்வோம்.//

நாம் முழு மூச்சுடன் முயன்றால் நிச்சயம் பசுமை மாற்றத்தை கொண்டுவர முடியும். அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டோம்.

நன்றிகள் மகேந்திரன்.

உணவு உலகம் said...

பசுமை விடியல்
பார் போற்ற விடியட்டும்.
வாழ்த்துக்கள்.

Kousalya Raj said...

@@ FOOD NELLAI said...

//பசுமை விடியல்
பார் போற்ற விடியட்டும்.
வாழ்த்துக்கள்.//

உங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றிகள் அண்ணா.